×

சாதியை சொல்லி தாக்குதல் எஸ்.ஐ., மற்றும் 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘‘பொது இடத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு கணவன், மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தங்களை தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும். காவலர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அதுவரை அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

The post சாதியை சொல்லி தாக்குதல் எஸ்.ஐ., மற்றும் 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...